‘‘நண்பரை உட்கார வைத்து மாமூல் வசூலிக்கும் அதிகாரி விவகாரம் வெளிவந்திருக்கே’’ என்றபடி விக்கியானந்தாவை ஏறிட்டு பார்த்தார் பீட்டர் மாமா. ‘‘நான் சொல்ல வந்தேன், நீங்க கேட்டுட்டீங்க…. தூங்கா நகர மாவட்டத்தின் தென்கோடியில், மெடல் மாவட்டத்துக்கு அருகே அமைந்திருக்கிறது மதுவை நினைவுபடுத்தும் பெயர் கொண்ட ஊர். இங்குள்ள நில அளவை பிரிவு அதிகாரி அலுவலகத்திற்கு வருவதே இல்லையாம். இவரை நில அளவை உள்ளிட்ட பணிகளுக்கு நேரிலும் பார்க்க முடியாது; போனில் கூட பிடிக்க முடியாதாம். அரசு அலுவலகத்தில், அவருக்கான இருக்கையில், தனது நண்பரை அமர வைத்து, தினசரி கறாராக பொதுமக்களிடம் வசூலித்து வருகிறாராம்.
இந்த அலுவலகத்தில் உள்ள இவரது உதவியாளர், பணி நிமித்தமாக வரும் பொதுமக்களிடம், ‘‘சார் வெளியே போயிருக்கார். என்ன விஷயம்? என்கிட்டச் சொல்லுங்க…’’ என்று டீலிங் ஆரம்பிக்கிறாராம். இது விவசாய நிலம் அதிகமாக உள்ள பகுதி. அதிகாரியின் நண்பரும், உதவியாளரும் சேர்ந்து அடிக்கும் கொட்டத்தால்… இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் நிலபுலன் வேலைகளை முடிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். அவசர வேலை என்றால் அதற்கு ஒரு ரேட்டு என்பதால் இங்கு வருவதற்கே பயப்படுகின்றனர். இதுகுறித்து யாராவது தட்டிக் கேட்டால்… ‘‘சாருக்கு இலைக் கட்சியில் செல்வாக்கு அதிகமாக்கும். இது மாஜியோட தொகுதி தெரியும்ல்ல…? ஒரு போன் போட்டாப் போதும். மத்ததை அவர் பார்த்துக்குவார்’ என்று மிரட்டுகிறார்களாம்.
இந்த தாலுகாவில் பொதுமக்கள் அளவை பணி, பட்டா மாறுதல் என அலுவலகத்திற்கு வந்தால் கட்டாய மாமூல் கொடுத்தால்தான் சிறிய பணி கூட நடக்கிறது என மற்ற அரசு அலுவலர்களே பகிரங்கமாக கூறுகின்றனராம். தற்போது இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறதாம். அலுவலகத்துக்கே வராமல் நண்பரையும், உதவியாளரையும் வைத்து கச்சேரி நடத்திக் கொண்டிருப்பது பற்றி மேலிடத்தின் கவனத்துக்கு இங்குள்ள சில அலுவலர்கள் கொண்டு போயிருக்கிறார்கள். வெகு விரைவில் அதிரடி நடவடிக்கை பாயும் என்று சொல்கிறார்கள்’’ என்றார். ‘‘சிறைகாக்கியின் நட்பால், சிறை குடியிருப்பில் கை வைத்த திருடன் பற்றி சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒருத்தர திருட்டு வழக்குல, வெயிலூர் ஜெயில்ல அடைச்சாங்க. ஜெயில்ல பணியாற்றும் அல்வா மாவட்டத்தை சேர்ந்த சிறைகாவலருக்கும், இந்த சிறைவாசிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்குது. சிறையில ரெண்டு பேரும் நண்பர்களாக மாறிட்டாங்களாம். அதுக்கு அப்புறமா ஜாமீன்ல அந்த சிறைவாசி வெளிய வந்திருக்காரு. அப்புறம் திரும்பவும் திருட்டு தொழில்ல இறங்கிட்டாராம். அதுவும் ஜெயில் குடியிருப்புக்குள்ளவே, சம்பவத்தை அரங்கேற்றம் செய்ய முயற்சி செஞ்சிருக்காரு. குடியிருப்புல திருட வந்தப்ப அங்கிருந்தவங்க, வெளி கதவை மூடிட்டு உள்ளூர் காக்கிகளுக்கு தகவல் சொல்லிட்டாங்களாம்.
வசமாக சிக்கிய அந்த நபர் கைய கத்தியால் அறுத்துக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செஞ்சிருக்காரு. உள்ளூர் காக்கிகள், கதவை உடைச்சி அவரை மீட்டிருக்காங்க. விசாரணையில, ஜெயில்ல பணியாற்றும் அந்த அல்வா மாவட்டத்தை சேர்ந்தவரை பார்க்க வந்ததாக கூறி இருக்காரு. அதோட அவர் சொல்லித்தான் இங்க திருடவே வந்தேன்னு சொல்லியிருக்காரு. அல்வா மாவட்டத்துக்காரர் எங்கேன்னு பார்த்தா? அவரு விடுமுறையில சொந்த ஊருக்கு போனதாக தெரியவந்திருக்குது. ஏற்கனவே ஜெயில் குடியிருப்புல பைக், ஸ்மார்ட் டிவின்னு திருட்டு போயிருக்குதாம். அதுக்கு அப்புறமாத்தான் 24 மணி நேரமும் பாரா டியூட்டி போட்டாங்களாம். ஆனா, இப்ப அந்த பாராவும் இல்லையாம்.
இதை தெரிஞ்சுதான் ஜாமீன் கிடைச்சதும், சிறை குடியிருப்புக்குள்ளவே கை வெச்சிருக்குறது தெரிஞ்சிருக்குது. இந்த மேட்டர் தான் இப்போ சிறைவட்டாரத்துல பரபரப்பா பேசப்படுது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஒன்றிய அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் மாநில தலைவர் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏகப்பட்ட பிரச்னையாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மன்னர் மாவட்டத்தில் தாமரை கட்சியில் வடக்கு, தெற்கு என 2 மாவட்டமாக பிரிக்கப்பட்டு இரண்டு மாவட்ட தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். மாநில தலைவர் ஆதரவாளர்கள் ஒரு பிரிவாகவும், ஒன்றிய அமைச்சர் ஆதரவாளர்கள் ஒரு பிரிவாகவும் உள்ளனர்.
மாநில தலைவர் ஆதரவாளர்களான 2 மாவட்ட தலைவர்களுக்கு ஒன்றிய அமைச்சர் ஆதரவாளர்கள் எந்த ஒத்துழைப்பும் கொடுக்காமல் எதிராகவே செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு மேலிடம் வரை சென்றதாம்…ஆனால் மேலிடம், எந்தவித ரியாக்சனும் காட்ட வில்லை. இந்த பிரச்னைக்கு இடையில் தமிழக ஒன்றிய அமைச்சரின் ஆதரவாளர்கள் பல பொறுப்புகளில் இருந்து வருகின்றனர். இதில் சிலர், மாவட்ட தலைமையிடம் அனுமதி பெறாமலும், அவர்களை மதிக்காமல் அவர்களது ஆதரவாளர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் மனுக்கொடுத்து வருவதால் இந்த 2 மாவட்ட தலைவர்களுக்கு தேவையான பிரச்னை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் ஒன்றிய அமைச்சர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
தொடர்ந்து இந்த பிரச்னை இருந்து வருவதால் மாவட்ட தலைமையை மதிக்காத ஒன்றிய அமைச்சரின் ஆதரவாளர்கள் மீது மாநில தலைமை கமலாலயத்திற்கு மாவட்ட தலைவர்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். இதனை கேள்விப்பட்ட ஒன்றிய அமைச்சரின் ஆதரவாளர்கள், ஏற்கனவே மாநில தலைமை பல பிரச்னையில் டென்ஷன்ல இருக்கு. இப்ப இந்த புகார் மனுவை பார்த்து மேலும் டென்ஷன் ஆகி புகார் அளித்தவர்களுக்கே பிரச்னை வரும் என கமென்ட் அடித்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் நாடாளுன்ற தேர்தலுக்குள் தாமரை கட்சிக்குள் 2 கோஷ்டிக்கு இடையே மோதல் வெடிக்கும் என மன்னர் மாவட்டத்தில் உள்ள நடுநிலை நிர்வாகிகள் சொல்கிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாவட்டத்தையே ஆட்டிப்படைக்கிறாராமே பெண் சர்வேயர்?’’ என்று பீட்டர் மாமா ஆச்சரியமாக கேட்க, விளக்கமா சொல்ல ஆரம்பித்தார் விக்கியானந்தா. ‘‘கோவை மாவட்டத்தில மதுக்கரை தாலுகா அலுவலகத்தில பணிபுரியும் பெண் சர்வேயரும் ஒருவர், குவிப்பதில மட்டுமே குறியா இருக்கார். லைசென்ஸ் பில்டிங் சர்வேயர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் முக்கியஸ்தர்கள் என எல்லாரிடமும் கரன்சி கேட்டு, கறாராக நடந்துக்கறாரு. இவருக்கு கரன்சி கொடுக்கலைன்னா, கோப்புகள் நகராதாம்.
இந்த பெண்மணி ஏற்கனவே இங்கு மூன்று வருடத்திற்கு மேல் பணியாற்றி, வெளிமாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் இதே தாலுகா அலுவலகத்திற்கு வந்து, கோலோச்சுகிறார். இவர், லஞ்ச பணத்தில், செட்டிபாளையம், மதுக்கரை போன்ற இடங்களில் பங்களா கட்டியுள்ளாராம். பெரிய அரிசி கடையும் நடத்தி வருகிறாராம். பல லட்சங்கள் கேட்டு நெருக்கடி கொடுப்பதால், சம்பந்தப்பட்டவங்க தர மறுத்து கடந்த நான்கு மாதங்களாக இவரிடமிருந்து எந்த கோப்புகளும் நகரவில்லையாம்’’ என்று முடித்தார்.