உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலையில் கடந்த 12ம் தேதி வரை பொருட்காட்சி நடைபெற்றது. இங்கிருக்கும் ராட்டினம் மற்றும் அவற்றின் இயந்திரங்களை அகற்றும் பணிகளில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த 15 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் தீபக்குமார் (18) என்பவர், அப்பகுதியில் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் பிணமாக கிடந்தார். போலீசாரின் விசாரணையில், தீபக்குமாருடன் பணியாற்றிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திரேஸ்குமார் (25), ராபின்குமார் (19) ஆகியோர் அவரை கொலை செய்து உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசியிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘கொலையான தீபக்குமாரின் தந்தை பினோத்குமார் கடந்த 2004ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் திரேஸ்குமாரின் தந்தை சுவாகா மனோஜ் சிங் என்பவரை படுகொலை செய்துள்ளார். தந்தையை கொன்றவரை பழிதீர்க்க திரேஸ்குமார் காத்திருந்தார். இந்நிலையில், தந்தையை கொன்றவரின் மகன் தன்னுடன் பொருட்காட்சியில் பணியாற்றுவது சமீபத்தில் அவருக்கு தெரியவந்தது. இதனால் நண்பர் ராபின்குமாருடன் சேர்ந்து திட்டமிட்டு, கடந்த 13ம் தேதி தீபக்குமாரை அழைத்துச்சென்று மது வாங்கி கொடுத்து அடித்துக்கொன்று உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசியுள்ளார்’’ என்றனர்.