பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா பஜாரில் தார்கலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையால் பாதிப்பு ஏற்படுவதாக கோரி ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர்கள் திடீரென தார்கலவை ஆலையை நோக்கி பேரணியாக சென்று ஆலைக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேவாலா டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையிலான போலீசார் போராட்டகாரர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் கலைந்த செல்லாததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தார்கலவை ஆலையை மறு உத்தரவு வரும் வரை திறக்ககூடாது என கூடலூர் கோட்டாட்சியர் முகமது குதரதுல்லா ஆலை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினார். அதன்பின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வருவதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.