சென்னை: அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மீறவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விளக்கம் அளித்தார். அதிமுகவிலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை பயன்படுத்த ஓபிஎஸ் அணியினருக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி , கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்சுக்கு இடைக்கால தடை விதித்தார். இதைஎதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல்உயர் நீதிமன்ற பெஞ்சு தள்ளிவைத்துள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணக்கு வந்தது. அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவுதம்குமார், ஓ.பி.எஸ்சுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு, பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆஜராகி, மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு இன்னும் வராததால், வழக்கை தள்ளிவைக்க வேண்டும். தற்போது வரை தனி நீதிபதியின் இடைக்கால தடை உத்தரவு மீறப்படவில்லை என்றார். இதையேற்ற நீதிபதி, விசாரணையை ஜன. 22க்கு தள்ளிவைத்தார்.