மண்டபம்,டிச.11: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் நொச்சுயூரணி ஊராட்சியில் இளைஞர்களுக்கு வெல்டிங் பயிற்சி பட்டறை நடைபெற்றது. மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நொச்சுயூரணி ஊராட்சி பகுதியில் அதிகமான இளைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மல்லிகை பூச்செடி நடுதல் மற்றும் தென்னை மரம் வளர்த்தால், பயிறு செடிகள் வளர்த்தல் உள்பட விவசாய தொழில் பார்த்து வருகின்றனர். மேலும் தினசரி விவசாய வேலைகள் இல்லாததால் இளைஞர்கள் கிராமத்தில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு மாற்றுத் தொழில் ஏற்படுத்திட நொச்சியூரணி ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தார். அதன் பேரில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் வெல்டிங் பயிற்சி பட்டறை கிராம சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நொச்சியூரணி ஊராட்சி மன்ற தலைவர் சீனி அரசு தலைமை வகித்தார். ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு தலைவி காளிமுத்து முன்னிலை வகித்தார். கிராம இளைஞர்களுக்கு வெல்டிங் பயிற்சி முறையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வெல்டிங் பயிற்சி அளித்த ஊக்குநர் முறையாக வெல்டிங் பயிற்ச்சியை கற்றுக்கொடுத்தனர்.
பின்னர் பயிற்சியில் தேர்ச்சி பெற்று உங்கள் குடும்பத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லலாம் என்று இளைஞர்களிடம் பயிற்சி ஊக்குநர்கள் தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இருளப்பன் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .முடிவில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வெல்டிங் தொழில் செய்ய கண்ணாடி, காலணி, தலைக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக வழங்கினார்கள்.