அலிபூர்துவார் : மேற்குவங்கத்துக்கான நிதியை விடுவிக்காத ஒன்றிய பாஜ அரசு உடனே பதவி விலக வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வடக்கு மேற்குவங்கத்துக்கு ஒருவார கால சுற்றுப் பயணம் சென்றுள்ளார். நேற்று அலிபூர்துவாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, ரூ.93 கோடி மதிப்பிலான 70 நலத்திட்டங்களை அறிவித்தார். பின்னர் உரையாற்றிய அவர், “ஒன்றிய பாஜ அரசு மேற்குவங்கத்துக்கு ரூ.1.15 லட்சம் கோடி நிலுவை வைத்துள்ளது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்ற முடியவில்லை. மேற்குவங்கத்துக்கான நிதியை ஒன்றிய அரசு சரியாக அளித்திருந்தால் பல மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும். மேற்குவங்கத்துக்கு தர வேண்டிய நிதியை கேட்டு பெறுவதற்காக சில எம்.பிக்களுடன் டெல்லி செல்ல உள்ளேன். வரும் 18,19, 20 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒருநாளில் பிரதமரை சந்திக்க அனுமதி கோரியுள்ளேன். மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு மேற்குவங்க ஏழை மக்களுக்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும் அல்லது மோடி அரசு பதவி விலக வேண்டும்” என்று ஆவேசமாக கூறினார்.