புதுடெல்லி: ஜிடிபி வளர்ச்சி குறித்து கடந்த வாரம் பேசிய பிரதமர் மோடி, நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி உலகப் பொருளாதார மந்த நிலையிலும், இந்தியாவின் பொருளாதாரம் மீட்சி பெற்று வலுவடைந்திருப்பதை காட்டுவதாக தெரிவித்திருந்தார். இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அவரது எக்ஸ் பதிவில், “கடந்த ஜூலை-செப்டம்பர் காலண்டிற்கான ஜிஎஸ்டி வளர்ச்சியை அடிப்படையாக வைத்து, மாற்றத்தக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றி பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் மீண்டும் பேசி வருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், அதன் நீண்ட கால ஆண்டு வளர்ச்சி விகிதம் முக்கியமானது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஆண்டு சராசரி ஜிடிபி வளர்ச்சி 8.1 சதவீதமாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் இதுவரை ஆண்டு சராசரி ஜிடிபி வளர்ச்சி 5.4 சதவீதமாக மட்டுமே உள்ளது,” என்று கூறியுள்ளார்.