கிருஷ்ணகிரி, டிச.9: கிருஷ்ணகிரி ஒன்றியம், மல்லிநாயனப்பள்ளி கிராமத்தில் ஒன்றிய அரசு துறை சார்பில் நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி ஒன்றியம், மல்லிநாயனபள்ளி கிராமத்தில் நேற்று நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம், மாவட்ட முன்னோடி இந்தியன் வங்கி, நபார்டு வங்கி, அஞ்சல் அலுவலகம், நேரு யுவகேந்திரா மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவச காஸ் அடுப்பு, அஞ்சல் அலுவலகம் சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி சுந்தர்ராஜ், முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் அப்துல், நபார்டு மேலாளர் ரமேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அரசு துறை சார்பில் விழிப்புணர்வு
previous post