சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 21 தமிழக மீனவர்களையும், 133 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மீன்பிடி படகுகளில் ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கடந்த 6ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மீன்பிடி தொழிலையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 மீனவர்களையும் அவர்களது மீன் பிடி படகுகளையும் விடுவிப்பதோடு, இலங்கை கடற்படையினரால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது வசமுள்ள 133 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.