சென்னை: தமிழ் நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தரை நியமித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தின் புதிய துணை வேந்தராக பேராசிரியர் பெலிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார். பேராசிரியர் பெலிக்ஸ், 32 ஆண்டுகள் கல்வி மற்றும் நிர்வாக பணியில் அனுபவம் வாய்ந்தவர். மீன்வள பல்கலைக் கழகத்தின் பொறுப்பு துணை வேந்தராகவும் இருந்து வருகிறார்.
கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக பேராசிரியராக இருந்தவர். பல்கலை நிர்வாகத்தில் அனுபவம் மிக்கவர். மீன்வள பல்கலைக் கழகத்தின் பதிவாளராகவும் இருந்தார். சென்னை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள மீன்வள பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராகவும், சென்னையில் உள்ள முதுநிலை மீன்வள பட்டப்படிப்பு நிறுவனத்தின் முதல்வர் பொறுப்பிலும், மாதவரம் மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வராகவும் இருந்தவர். இதுதவிர பல்வேறு பதவிகளிலும் இருந்துள்ளார். பல புத்தகங்கள் எழுதியதுடன் விருதுகளும் பெற்றுள்ளார்.