தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் அதிகளவில் உள்ள கரும்பு விவசாயிகள் மீது அதிகம் கவனம் செலுத்தி, அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023-2024ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், 2022-23 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195/- சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு 2022-23ம் அரவைப் பருவத்திற்கு அறிவித்துள்ள ஆதார விலையான ரூ.2821.25-யைக் காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ. 195 வழங்கிடும் வகையில், தமிழ்நாடு அரசு ரூ.253.70 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து வேளாண்மை-உழவர் நலத்துறைக்கு வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.
கரும்பு சாகுபடிப் பரப்பினையும், உற்பத்தியையும் அதிகரிப்பதற்காக, அதிக கரும்பு மகசூலுடன் அதிக சர்க்கரைக் கட்டுமானமும் தரக்கூடிய கரும்பு ரகங்களை பிரபலப்படுத்துதல், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் மானிய விலையில் சொட்டு நீர்ப்பாசனம், கரும்பு அறுவடை இயந்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நலிவடைந்து வரும் சர்க்கரை ஆலைகளில் புனரமைப்பு, எத்தனால் உற்பத்தித் திட்டம், இணைமின் திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதால் சர்க்கரை ஆலைகளின் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
கரும்பு விவசாயிகளின் நலனுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகளினால், 2020-21 அரவைப்பருவத்தில் 95,000 ஹெக்டேராக இருந்த கரும்புப் பதிவு, 2022- 23 அரவைப் பருவத்தில் 1,50,000 ஹெக்டேராகவும், கரும்பு அரவை 98.66 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 160.54 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் அதிகரித்துள்ளது. மேலும் சர்க்கரைக் கட்டுமானம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு 2022-23 அரவைப் பருவத்தில் 9.27 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.தற்போது தமிழ்நாட்டில் இயங்கி வரும் 2 பொதுத்துறை, 14 கூட்டுறவு மற்றும் 15 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2022-23 அரவைப் பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள ஆதார விலையான ரூ.2821.25 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.195 யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.3016.25/- கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2022-23 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விபரம் சேகரிக்கப்பட்டு சர்க்கரைத்துறை ஆணையரகத்தால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுக்களின் பரிந்துரையின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ.253.70 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.42 இலட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.