சென்னை: மழை வெள்ளத்தை வைத்து வதந்தி பரப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் இதுவரை இல்லாத அளவில் மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதை வைத்துக் கொண்டு சில விஷமிகள், முதலை ஊருக்குள் புகுந்து விட்டது, வீடுகளுக்குள் பாம்பு வருகிறது, ஒரு பகுதியே மூழ்கி விட்டது என்று 2015ம் ஆண்டு பெய்த பெரு வெள்ள படங்களை தற்போது நடந்ததுபோல பரப்பி வருகின்றனர். விமானநிலையத்தில் தண்ணீர் தேங்கிய பழைய படத்தையும் இதுபோல் பரப்பி வருகின்றனர்.
இதனால் வீண் வதந்திகளையும், பீதியையும் உருவாக்கும் வகையில் பழைய படங்களையும், பழைய தகவல்களையும் சமூக வலைதளங்களில் பரப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.