கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள கஞ்சமநாதன் பேட்டையை சேர்ந்தவர் ஜோதி மகன் அசோக்குமார்(26). இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடலூரில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது, அந்த கல்லூரியில் அவருடன் படித்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்து உள்ளார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு அவருடைய பெற்றோர் வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். மனமுடைந்த அந்த இளம்பெண் கடந்த மாதம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அசோக்குமார் கடந்த சில வாரங்களாக மன உளைச்சலிலும், விரக்தியிலும் இருந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் மாலை அசோக்குமார், தனது பெற்றோரிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை தம்பிபேட்டையில் உள்ள விளைநிலத்தில் உள்ள கிணற்றில் அசோக்குமார் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நேற்றுமுன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற அசோக்குமார், அந்த விளை நிலத்தில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது கை கால்களை தானே கயிற்றால் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.