சென்னை: சென்னையில் மழை நிவாரணப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மிக்ஜாம் புயலால் சென்னை, சுற்றுப்புற மாவட்டங்களில் கன மழை கொட்டியது. மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றும் வீசியது. கனமழையால் சென்னை மாநகரம் முழுவதையும் வெள்ளம் சூழ்ந்தது. பெரும்பாலான இடங்களில் மழைநீா் தேங்கி உள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஒரு சில பகுதிகளில் மட்டுமே மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் வடிந்த சாலைகளில் உடைந்த மரக்கிளைகள், இலைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன.
கழிவுகள் தேங்கியுள்ள சாலைகளில் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் சென்னை கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு தங்கி இருக்கும் மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அங்கு தயார் செய்யப்பட்ட காலை உணவுகளை அங்குள்ள மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.