இம்பால்: மணிப்பூரில் நேற்று புதிதாக வெடித்த மோதலில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3ம் தேதி வெடித்த கலவரத்தில் இதுவரை 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அங்கு மெதுவாக இயல்பு நிலை திரும்பி வந்தது. தற்போது நேற்று மீண்டும் பயங்கர மோதல் வெடித்தது. இருதரப்பினரும் மணிப்பூரின் தெங்னௌபால் மாவட்டத்தில் லீத்து கிராமத்தில் மோதிக்கொண்டனர்.
இருதரப்பினருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,’மியான்மருக்குச் செல்லும் போராளிகளின் குழுவை அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருந்து தடுத்து தாக்கினார்கள். சம்பவ இடத்திற்குச் சென்ற பாதுகாப்புப் படையினர் இதுவரை 13 உடல்களைக் கண்டெடுத்தனர்.
அவர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் அவர்கள் உள்ளூர்வாசிகள் அல்ல’ என்றார். தெங்னௌபால் மாவட்டம் மியான்மர் நாட்டின் எல்லையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.