சென்னை: சென்னை ஐஐடியில் படித்து வந்த மேற்கு வங்க மாணவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்த விவகாரத்தில், உண்மை கண்டறியும் குழு அளித்த புகாரின் பேரில் ஐஐடி பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவர் சச்சின்குமார் ஜெயின்(31). இவர் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பை ஐஐடி வளாகத்தில் தங்கி படித்து வந்தார். கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி ஐஐடிக்கு மாணவர்களுடன் சென்ற சச்சின், பாதியிலேயே ஐஐடியை விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
மாலையில் வீடு திரும்பிய சக மாணவர்கள், சச்சின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து வேளச்சேரி போலீசுக்கு ெதரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தனது செல்போனில் ஆங்கிலத்தில் பேசியிருந்த சச்சின் நான் நலமாக இல்லை என்று தெரிவித்து, அதை நண்பர்களுக்கும் அனுப்பியது தெரிய வந்தது.
இதையறிந்த ஐஐடி மாணவர்கள் ஐஐடி வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சச்சின் இறப்புக்கு இங்குள்ள சில பேராசிரியர்கள் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டினர். இதையடுத்து, ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் அளித்த விசாரணை அறிக்கையின் பேரில் ஐஐடி பேராசிரியர் ஆசிஷ்சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.