சாயல்குடி, நவ.29: கடலாடி யூனியனில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தேர்வாகியுள்ள பஞ்சாயத்துகளில் நடந்து வரும் குளம், படித்துறை, சாலை, கதிர்அடிக்கும் தளம், பூங்கா வேலி, கட்டுமான பணிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமாக ரெத்தினசாமி ஆய்வு செய்தார். டி.மாரியூரில் நடந்து வரும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடு, குடிநீர் குழாய், ஒருங்கிணைந்த பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் கட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பிறகு கடலாடி யூனியன் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, ஆணையாளர் ஜெய்ஆனந்தன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்களிடம் கிராமங்களில் நடந்து வரும் அரசு திட்டப்பணிகளின் விவரங்கள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் நடந்து வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து, ஆலோசனை நடத்தினர்.
அப்போது கடற்கரை பகுதியான கடலாடி ஒன்றியத்தில், கிராம பகுதிகளில் மழை தண்ணீர் தேங்க விடாமல் உடனுக்குடன் வெளியேற்ற பஞ்சாயத்து தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீரை காய்ச்சி குடிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொசு மருந்து அடித்தல், குடிநீரில் கிருமி நாசினி தெளித்தல், குடிநீர் குழாய், ரேசன் கடை, சிறுவர்கள் விளையாடும் மைதானம் உள்ளிட்ட பொது இடங்களில் கிருமி நாசினி
மருந்து அடித்தல் உள்ளிட்ட மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.