புதுடெல்லி: மாருதி சுசூகி கார்கள் விலை ஜனவரி 1ம் தேதியில் இருந்து உயர்த்தப்படுவதாக, இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியச் சந்தையில் முன்னணியில் இருக்கும் மாருதி சசூகி நிறுவனம், கார்களின் விலையை உயர்த்த உள்ளதாகவும், ஜனவரி 1ம் தேதி முதல் புதிய விலை அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.
கார் விலை எவ்வளவு உயரும் என்ற தகவலை இந்த நிறுவனம் வெளியிடவில்லை. பண வீக்கம் அதிகரிப்பால் கார் உற்பத்திக்கான மூலதனப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாகவே இந்த விலை உயர்வு அமலுக்கு வர உள்ளது என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2 சதவீதம் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசூகியின் விலை குறைந்த காராக ஆல்டோ உள்ளது. இதன் துவக்க ஷோரூம் விலை ₹3.54 லட்சம். இந்த நிறுவனத்தின் பலேனோ, ஸ்விப்ட், வேகன் ஆர் ஆகிய 3 கார்கள் அதிகம் விற்பனையாகும் டாப் 3 கார்களாக உள்ளன. இதுதவிர, பிரஸ்ஸா, கிராண்ட் விட்டாரா , ஜிம்மி ஆகிய எஸ்யுவிக்களையும், டொயோட்டா இனோவா ஹைகிராஸ் அடிப்படையில் உருவான இன்விக்டா எம்பிவி-யையும் சந்தைப்படுத்துகிறது. இந்திய பயணிகள் வாகன சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்களிப்பு 42 சதவீதமாக உள்ளது. மாருதி சுசூகியைத் தொடர்ந்து, டாடா நிறுவனமும் கார் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.