சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் 24 மணிநேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு அறை ரிப்பன் மாளிகையில் செயல்படுகிறது. மழை பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் 1913 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து முன்னேற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 25,000 உணவு பொட்டலங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், மழைநீர் தேங்கினால் உடனடியாக வெளியேற்ற 700க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருப்பதாக கூறினார். பொதுமக்கள் தேவையாக 25,000 உணவு பொட்டலங்கள் தயாராக இருப்பதாகவும், மழை பாதிப்பு தொடர்பாக 1913 என்ற எண்ணுக்கு அழைத்து பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார். கனமழை எச்சரிக்கை காரணமாக குடிநீர், பால், உணவு மற்றும் தேவையான காய்கறிகளை இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மழை பெய்யும் நேரத்தில் நீர் நிலைகள், நீர்வழி கால்வாய்கள் மற்றும் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் செல்ஃபி எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் கம்பங்கள், மின்சாதன பெட்டிகள், மரங்களின் கீழ் நிற்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. …