Sunday, September 29, 2024
Home » பண்ருட்டி அருகே 2 வயது குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய் கைது பரபரப்பு தகவல்

பண்ருட்டி அருகே 2 வயது குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய் கைது பரபரப்பு தகவல்

by Karthik Yash

பண்ருட்டி, நவ. 25: பண்ருட்டி அருகே பெற்ற குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஓறையூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அகல்யா(19). இவர் நாமக்கல்லில் நூல் கம்பெனி ஒன்றில் வேலை செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த சக்தி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு சசிதரன் என்ற 2 வயது மகன் இருந்தான். இவர்களது காதல் ஓராண்டில் கசந்தது. சக்தி அடிக்கடி குடித்து விட்டு அகல்யாவிடம் தகராறு செய்ததால், கணவரை பிரிந்து ஓறையூரில் மகனுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மகன் சசிதரனுக்கு இட்லி கொடுத்துவிட்டு, தூங்க வைத்து விட்டு வீட்டு வேலை செய்தார். பின்னர் 12 மணிக்கு சசிதரனை எழுப்பிய போது அசையாமல் இருந்ததாகவும் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் சசிதரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து அகல்யாவின் அண்ணன் அசோக் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் சசிதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் சசிதரன் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன்(பொறுப்பு) இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்டமாக தாய் அகல்யாவிடம் நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்குபின் முரணாக கூறியதால் போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் சசிதரனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து அகல்யா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது, எனக்கு பெற்றோர் இல்லை. நான் எனது அத்தை பச்சையம்மாள் பராமரிப்பில் வளர்ந்து வந்தேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல்லில் நூல் கம்பெனியில் வேலை செய்த போது, அங்கு வேலை பார்த்த சக்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் எங்களுக்கு சசிதரன் என்ற மகன் உள்ளான். சக்தி அடிக்கடி குடித்துவிட்டு என்னிடம் தகராறு செய்வதால், அவர் மீது நாமக்கல் போலீசில் புகார் செய்தேன். போலீசார் அவரை கைது செய்தனர்.

இதனையடுத்து நான் எனது சொந்த ஊரான ஓறையூருக்கு வந்தபோது அத்தை பச்சையம்மாள் ஒரு குழந்தையுடன் வந்துட்டியா உனக்கு அசிங்கமா இல்லையா என்று தினந்தோறும் திட்டினார். ஊரில் உள்ளவர்களும் இதுபோல பேச ஆரம்பித்தனர். நானும் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் இருந்து வந்தேன். இந்த குழந்தையால் தான் மற்றவர்களுடன் பேச முடியவில்லை என்று நினைத்து குழந்தையை கொலை செய்து விட முடிவு செய்தேன். அதேபோல சசிதரனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் இருந்தேன். ஆனால் போலீசார் இதை கண்டுபிடித்து என்னை கைது செய்துவிட்டனர். என்று அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

five × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi