ஈரோடு,நவ.24: ஈரோடு மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி,ஈரோடு தெற்கு போலீசார் நேற்று முன் தினம் ஜெகநாதபுரம் காலனி ஆர்ச் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக இருசகக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அதில், அவர்கள் ஈரோடு மாவட்டம், பள்ளியூத்து, சபரி கார்டன் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (21), ஈரோடு அருகே உள்ள பச்சப்பாளி, ஓம்காளியம்மன் கோயில் முதல் வீதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (21) என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெற்றிவேலிடம் 350 கிராம் கஞ்சா மற்றும் எடைபோடும் மெஷின் ஒன்றும், மோகன்ராஜிடம் 400 கிராம் கஞ்சா மற்றும் எடைபோடும் மெஷின் ஒன்றும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான 750 கிராம் கஞ்சா, எடை மெஷின்கள் மற்றும் அவர்கள் வந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.