சிவகங்கை, நவ.24: சிவகங்கை நகர்ப்பகுதியில் சாலைகளில் திரியும் மாடுகளை உரிமையாளர்கள் உடனடியாக பிடித்து செல்லாவிட்டால் அவைகளை பிடித்து ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலப்பகுதி, பஸ் ஸ்டாண்ட், அரண்மனை வாசல், மதுரை சாலை, மேலூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள் திரிகின்றன. 50க்கும் மேற்பட்ட மாடுகள் சாலைகளின் நடுவில் நிரந்தரமாக எப்போதும் காணப்படுகின்றன. திடீரென சாலைகளில் ஓடி வரும் மாடுகளால் வாகன ஓட்டிகள் நிலை குலைந்து கீழே விழுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
சாலைகளில் ஓடுவது, மாடுகளுக்குள் சண்டையிட்டு வாகனங்களில் வந்து விழுவது என தொடர்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. இந்த விபத்துகளால் உயிர்ப்பலிகளும் நடந்து வருகிறது. இதுகுறித்து நகராட்சி சார்பில் தொடர் அறிவிப்பு வெளியிடப்பட்டும் மாடுகளின் உரிமையாளர்கள் கண்டு கொள்ளாமல் மாடுகளை சாலைகளிலேயே திரிய விடுகின்றனர். இதையடுத்து தற்போது உடனடியாக சாலைகளில் திரியும் மாடுகளை உரிமையாளர்கள் பிடித்து செல்ல வேண்டும்.
அவைகளை வீடுகளிலேயே தோட்டங்களிலோ கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். இதையும் மீறி சாலைகளிலோ, தெருக்களிலோ, பொது இடங்களிலோ பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் திரியவிடும் பட்சத்தில் நகராட்சி சார்பில் மாடுகளை பிடித்து அடைத்து வைக்கப்படும். அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, தொடர் நடவடிக்கையாக ஏலம் விடப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.