ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சியில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு பெரியபாளையம், தண்டுமாநகர், ராள்ளபாடி, ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், வேலப்பாக்கம், வடமதுரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 6 முதல் 12 வகுப்பு வரை 950 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கும் மழைநீர் வெளியேற வழி இல்லாததால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இதனால் மாணவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.