புதுடெல்லி: பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் படத்தை வெளியிட்டதற்காக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ய கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி, பழைய நங்கல் கிராமத்தை சேர்ந்த 9 வயது தலித் சிறுமி கடந்த 2021ல் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பலாத்காரம் செய்யப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டதாக அவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பலாத்காரத்துக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சிறுமி தன்னுடைய பெற்றோருடன் இருக்கும் படத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் படத்தை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேட ராகுல் காந்தி முயற்சிக்கிறார். எனவே அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோரி சமூக சேவகர் மக்ரந்த் மாட்லேக்கர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், தலைமை நீதிபதி(பொறுப்பு) மன்மோகன் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணை நடந்தது.அப்போது ஆஜரான மனுதாரரின் வழக்கறிஞர்,‘‘ராகுல் காந்தி மீது இன்னும் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை’’ என்றார். இதையடுத்து தலைமை நீதிபதி, ‘‘ இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து 10 நாட்களுக்குள் போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை டிசம்பர் 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது’’ என்றார்.