திருப்போரூர்: திருப்போரூர் புறவழிச்சாலையில் பயணிகள் வேன் மோதி, லோடு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருப்போரூர் நகர பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக காலவாக்கத்தில் இருந்து ஆலத்தூர் வரை 6 கிமீ தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக திறக்கப்படாத நிலையில் பணிகள் முடிவடைந்து விட்டதால் வாகனங்கள் அந்த புறவழிச்சாலையில் சென்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று காலை 7.30 மணியளவில் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற லோடு வேன் திருப்போரூர் அருகே வந்தது. அப்போது, திருப்போரூர் நகர பகுதியில் இருந்து நெம்மேலி நோக்கி சென்ற பயணிகள் வேன் மீது மோதியது. இதில், லோடு வேன் தலை குப்புற கவிழ்ந்து முன்பக்க கண்ணாடி உடைந்தது. வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
அதேபோன்று, பயணிகள் வேனில் ஆட்கள் யாரும் இல்லாததால், முன்பக்க கண்ணாடி உடைந்து வலது பக்க சேதம் ஏற்பட்டது. தகவலறிந்த திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கிரேன் மூலம் விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்டனர். மேலும், விபத்து குறித்து இரு தரப்பு புகாரின்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.