ஆவடி: ஆவடி அருகே இன்று காலை வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென கரும்புகை ஏற்பட்டது. இதனால் பயணிகளிடையே பதட்டம் நிலவியது. பின்னர் அப்பழுதுகளை ரயில்வே ஊழியர்கள் மாற்றி சீரமைத்து, சுமார் 20 நிமிடம் தாமதமாக சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. திருவனந்தபுரத்தில் இருந்து நேற்றிரவு சென்னை நோக்கி ஒரு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. இந்த ரயில் இன்று காலை 8.02 மணியளவில் திருநின்றவூர்-நெமிலிச்சேரில் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது ஏசி பெட்டியில் இருந்து கரும்புகை வந்தது. ரயிலில் இருந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்ததால் நிறுத்தப்பட்டது.
இதற்குள் ரயில் பயணிகள், பெட்டிக்குள் இருந்த தீயணைப்பான் கருவியால் ஏசி பெட்டியில் ஏற்பட்ட கரும்புகையை அணைக்க முயற்சித்தனர். ரயில் டிரைவர் மற்றும் கார்டு ஆகியோர் வந்து, ஏசி பெட்டியின் அடிப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது ஏசி பெட்டிக்கு அடியில் உள்ள சக்கரத்தின்கீழ் பிரேக் பிணைப்பு பகுதியில் கரும்புகை வந்திருப்பது தெரியவந்தது. பிரேக் ஷூ பகுதியில் ஏற்பட்டிருந்த பழுதுகளை ரயில்வே ஊழியர்கள் உடனடியாக மாற்றி சீரமைத்தனர். இதைத் தொடர்ந்து, சுமார் 20 நிமிடம் தாமதமாக திருவனந்தபுரம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையை நோக்கி கிளம்பி சென்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.