சென்னை: நடிகை கௌதமி சமீபத்தில் நில மோசடி தொடர்பாக வடக்கு மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் ஒன்று அளித்தார். அதில் தனக்கு அறிமுகமான சென்னையை சேர்ந்த அழகப்பன் பொது அதிகார முகவராக நியமித்தேன் . இவரிடம் திருவண்ணாமலையை அடுத்த ஐங்குணம் கிராமத்தில் 3.99 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்குவதற்காக ரூபாய் 25 லட்சம் பணத்தை கொடுத்தேன்.
அதன் மூலம் அவர் வாங்கிய 3.99 ஏக்கர் நிலத்தின் கிரைய பத்திரத்தில் என்னுடைய பெயருடன் அழகப்பனின் மனைவி நாச்சியம்மாள் பெயரையும் இணைத்து மோசடி செய்துள்ளார். இந்த விஷயம் தற்போது தனக்கு தெரிய வந்துள்ளது. தான் கொடுத்த பணத்தில் வாங்கிய நிலத்தின் கிரைய பத்திரத்தில் நாச்சியம்மாள் பெயரையும் சேர்த்து மோசடி செய்ததன் காரணமாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தனது 25 கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக நடிகை கௌதமி அளித்த புகாரில் பாஜக பிரமுகர் அழகப்பன் ,அவரது மனைவி ,மகன் உள்ளிட்ட 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் தலைமறைவாக உள்ள அழகப்பன் மற்றும் அவருடைய மனைவி நாச்சியம்மாள் வெளிநாடு தப்பிச் சென்று இருக்கலாம் என்ற தகவலால் அவர்களுக்கு லுக் அவுட் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைமறைவாக உள்ள 6 பேரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.