சென்னை: தங்கம் விலை நேற்று ஜெட் வேகத்தில் அதிரடியாக சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக சரிவை கண்டது. தீபாவளிக்கு முந்தைய நாளான 11ம் தேதி மட்டும் தங்கம் விலை சவரன் ரூ.360 வரை குறைந்து ஒரு சவரன் ரூ.45,800க்கும் விற்கப்பட்டது. தீபாவளி பண்டிகை மற்றும் விலை குறைவு போன்ற காரணங்களால் நகை விற்பனை கடந்த ஆண்டை விட அதிகரித்தது.
தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. அதாவது, 14ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,920க்கு விற்கப்பட்டது. 15ம் தேதி தங்கம் விலை மேலும் அதிகரித்தது. சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,160க்கும் விற்கப்பட்டது. 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 வரை உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்தது.
அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,635க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.45,080க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,700க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,600க்கும் விற்கப்பட்டது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.