பழநி, நவ. 17: பழநியில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானம் மது அருந்தம் பாராக வருகிறது. இதனை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் முன்புறமும், பின்புறமும் பெரிய அளவிலான மைதானங்கள் உள்ளன. இந்த மைதானங்களின் அருகில் உழவர் சந்தை செயல்பட்டு வந்தது. தற்போது காந்தி மார்க்கெட் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அங்கு செயல்பட்டு வந்த கடைகள் நகராட்சி மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த மைதானத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமனோர் நடைபயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் சிலர், இந்த மைதானத்தை மது அருந்தும் பாராகவும் மாற்றி உள்ளனர். நகராட்சி பள்ளியின் பின்புறத்தில் உள்ள மைதானத்தில் மது பாட்டில்கள் அதிகளவு கிடக்கின்றன. சிலர் குடித்து விட்டு போதை தலைக்கேறியதும் மது பாட்டில்களை மைதானத்திலே உடைத்து போட்டு சென்று விடுகின்றனர். இதனால் பகல் நேரங்களில் அவ்வழியே செல்லும் மாணவர்களின் கால்களை உடைந்த கண்ணாடி துகள்கள் பதம் பார்த்து விடுகின்றன.
மேலும் மைதானத்தை திறந்தவெளி கழிப்பிடமாகவும் மாற்றி விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் பள்ளி பகுதியில் இரவு நேர காவல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பள்ளி கேட்டுகளை இரவு நேரங்களில் பூட்டி வைக்க வேண்டும். மது அருந்தாமல் தடுக்கும் வகையில் போலீசார் இப்பகுதியில் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மைதானத்தில் நடக்கும் நிகழ்வுகளை கண்டறியும் வகையில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.