ஈரோடு, நவ.17: சாதி பெயரை சொல்லி திட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இது குறித்து ஈரோடு நேதாஜி சாலை முனிசிபல் சத்திரத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி தமிழரசி (27) என்பவர் நேற்று ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாநகராட்சி 35வது வார்டில் எனது அம்மா பார்வதி நிரந்தர தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், உதவியாக அவருடன் பணிக்கு சென்று வருகிறேன். இந்நிலையில், 35வது வார்டில் சுய உதவிக்குழுவை சேர்ந்த தூய்மை பணி மேற்பார்வையாளராக பணியாற்றிய மாதேஸ்வரன், வாகன பிரிவு மேற்பார்வையாளர்களாக பணியாற்றிய யுவராஜ் இருவரும் அந்த வார்டுக்காக ஏற்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் குழுவில் தூய்மை பணி செய்யும் பெண்களை தகாத வார்த்தையால் பேசி பதிவிட்டனர்.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் கடந்த மாதம் புகார் அளித்தோம். இந்நிலையில், ஆணையாளரிடம் புகார் அளித்த முன் விரோதம் காரணமாக நேற்று முன்தினம் மாதேஸ்வரன் என்னை சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, மாதேஸ்வரன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.