சென்னை: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சுய உதவி குழுவினருக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் விதமாக மேய்க்கால் நிலங்களில் அதிக மகசூல் தரும் பசுந்தீவன புல்வகைகளை உற்பத்தி செய்வதன் மூலம், வணிக ரீதியிலான தீவன உற்பத்தியை மேற்கொண்டு, தேவைப்படும் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தீவனம் கிடைக்க செய்ய முதற்கட்டமாக கோவை, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் பசுந்தீவனம் உற்பத்தி செய்ய ரூ.2.33 கோடிக்கு நிர்வாக ஒப்புதலும், உரிய வழிகாட்டுதல்களையும் வழங்கி அரசாணை கடந்த 6.11.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனால் 25 ஏக்கரில் இருந்து சுமார் 3,500 மெட்ரிக் டன் பசுந்தீவனம் உற்பத்தி செய்யப்படும்.