காஞ்சிபுரம்: மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர் கலைச்செல்வி மோகன், மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கலெக்டர் அலுவலகம் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் திங்கட்கிழமைதோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில், கலெக்டர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 361 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பொதுமக்களிடம் மனுக்கள் மீதான குறைகளையும் கலெக்டர் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். இலவச பட்டா கோரி மனு:
இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம், வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட கூழங்கல்சேரியைச் சேர்ந்த இருளர் இன மக்கள் இலவச பட்டா வேண்டி கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், வைப்பூர் ஊராட்சி கூழங்கல்சேரி கிராமத்தில் கடந்த 25 வருடங்களாக வசித்து வருகிறோம். இங்கு 22 குடும்பங்கள் உள்ளன. எங்களுக்கு பட்டா இடம் கிடையாது. 12 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். மீதமுள்ள குடும்பங்கள் ஏரி புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றன. எனவே, எங்கள் இருளர் இன குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்கிட வேண்டி கேட்டுக் கொள்கிறோம் என்று கோரியிருந்தனர்.