திருக்கழுக்குன்றம்: திருப்போரூர் அருகே டிரைவரிடம் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்போரூர் அடுத்த தாழம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (32). ஓட்டுநரான இவர், நேற்று முன்தினம் இரவு தாழம்பூர் – காரணை கூட்டு சாலை அருகே நின்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, ஒரே பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள், ஹரிஹரன் கையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பிச்சென்றனர். உடனே, ஹரிஹரன் அருகில் இருந்த நபரின் செல்போனை வாங்கி 100 என்ற காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.