விருதுநகர்: விருதுநகர் பாவாலி சாலையில் அதிமுக பூத் கமிட்டி மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்து பேசுகையில், ‘‘பூத் கமிட்டி பொறுப்பு வழங்குவதில் கவனம் வேண்டும். அதிமுக, எடப்பாடியின் உண்மை விசுவாசியாக இருக்க வேண்டும். அங்கும் இங்கும் சென்று வந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கலாமா என்று பார்த்து போடுங்கள்.
பூத் கமிட்டியில் 62 பேர் போட்டுள்ளோம். இதனால் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் மட்டுமல்ல. அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும். இதற்கு அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உழைக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் நபர் பிரதமராக வர வேண்டும் அல்லது எடப்பாடி பழனிசாமியே பிரதமராக வர வேண்டும் என மீண்டும் கூறிக் கொள்கிறேன்’’ என்றார்.