உடுமலை, நவ.4: உடுமலை அருகே உள்ள கல்லாபுரம் ஊராட்சி பூளவாடிபுதூரில் அமராவதி ராஜவாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் குறுக்கே செல்லும் பாலத்தை தாண்டித்தான், இக்கிராம மக்கள் ரேஷன் கடைக்கும், மாணவர்கள் பள்ளிக்கும் செல்கின்றனர். ஆனால் பாலத்தின் இருபுறமும் சிறிய தடுப்புச்சுவர் கூட இல்லை. சமமட்ட பாலமாக உள்ளது. வாய்க்காலில் எப்போதும் அதிகளவில் தண்ணீர் செல்லும்.
இதனால் குழந்தைகள் தவறி வாய்க்காலில் விழ வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரும், ஆபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. இப்பகுதி மக்கள் ஒவ்வொரு தேவைக்கும் பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டி உள்ளது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த பாலத்தில் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.