சென்னை: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. நாட்டின் 76வது சுதந்திர தினம், விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி அக்டோபர் 16ம் தேதி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் திமன்றம் உத்தரவிட்டும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை என்று கூறி காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. பொது அமைதியை கருத்தில் கொண்டு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை விதிக்க மனுவில் கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாட்டு அரசின் மேல்முறையீட்டு வழக்கு நவம்பர் 3-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.