சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலிருந்து எவ்வித முன் அனுமதியும் பெறாமல் காப்பீடு என்ற பெயரில் சந்தா தொகையை தானாக எடுத்துக் கொள்வதோடு, அதற்கு ஜிஎஸ்டி வரியும் விதிப்பதென்பது வன்மையான கண்டனத்துக்குரியது. தனியார் வங்கிகளின் இத்தகைய பகல் கொள்ளையை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. வாடிக்கையாளர்கள் புகார்கள் குறித்து விசாரித்து தொடர்புடைய வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு மறுத்து வருவது வங்கிகளின் கொள்ளைக்கு ஒன்றிய அரசு துணை போகிறதோ என்ற வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பலதரப்பட்ட வங்கி சேவைகளை முறைப்படுத்தவும், வங்கிகளின் எந்த ஒரு திட்டத்திலும் வாடிக்கையாளரை இணைக்கவும் உரிய வழிகாட்டு நெறிமுறைகைள உருவாக்க வேண்டும். அதை கடைபிடிக்க தவறும் வங்கிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.