தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயில் மத்திய தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ளது. பெரிய கோயிலுக்கு பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால் அனுமதியின்றி டிரோன் கேமராவில் படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 27ம்தேதி இரவு பெரியகோயில் மேற்பகுதியில் டிரோன் கேமரா பறந்து கொண்டிருந்ததை ரோந்து சென்ற எஸ்பி ஆஷிஷ்ராவத் பார்த்து உள்ளார். இதையடுத்து கோயில் அருகே உள்ள மேம்பால வளைவு பகுதியில் சென்று பார்த்தபோது, வாலிபர்கள் சிலர் டிரோன் கேமராவை இயக்கி பெரிய கோயிலை படம் பிடித்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து தஞ்சாவூர் தெற்கு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த கவியரசன் (21), தென்னரசு (19), சூர்யா (19), மற்றும் 18 வயது வாலிபர் என அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும், 4 பேரும் தஞ்சாவூரில் கோயிலை சுற்றிப்பார்க்க வந்தபோது டிரோன் கேமராவில் பெரியகோயிலை படம் பிடித்ததும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.