திருமலை: வாழ்நாள் முழுவதும் சந்திரபாபு, இனி சிறையில்தான் இருக்கவேண்டும் என ஆந்திர அமைச்சர் ரோஜா கூறினார். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு, திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைதாகி கடந்த ஒன்றரை மாதங்களாக சிறையில் உள்ளார். இந்நிலையில் நேற்று ராஜமுந்திரியில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது: சந்திரபாபு தனது ஆட்சியின்போது திறன் மேம்பாட்டு திட்டத்தில் பல கோடி ரூபாயை முறைகேடு செய்துள்ளார். இதற்கான சாட்சி, ஆதாரங்கள் உள்ளதாக சிஐடி விசாரணையில் தெரியவந்தது. இதனால்தான் அவர் தற்போது சிறையில் உள்ளார்.
இதுதவிர அவர் மீது அடுத்தடுத்து 3 வழக்குகள் உள்ளன. முதல் வழக்கில் இருந்து தன்னை நிரபராதி என நிரூபிக்க வலுவான ஆதாரங்களை அவரால் முன்வைக்க முடியாமல் திணறிவருகிறார். அவர் தவறு செய்ததால்தான் சிறையில் உள்ளார். இதனால் மற்ற வழக்குகளிலும் அவருக்கு இதே நிலைதான் நீடிக்கும். அவர் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் வருமான வரித்துறை, பொருளாதார குற்றப்பிரிவு போன்ற துறைகள் சார்பில் விசாரித்து எடுக்கப்பட்டவை. அவற்றில் தவறுகளை கண்டறியப்பட்டதால்தான் சந்திரபாபு தற்போது சிறையில் உள்ளார். இனி, சந்திரபாபு தனது வாழ்நாள் முழுவதும் சிறையில்தான் கழித்தாக வேண்டும். இது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.