சென்னை: நள்ளிரவில் வெடித்து சிதறும் என்று நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மரக்காணத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த், அஜித் வீட்டிற்கு மிரட்டல் விடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், நடிகர் விஜய் வீட்டில் வெடி குண்டு வைத்திருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் வெடித்து சிதறும்’ என்று கூறி இணைப்பு துண்டித்துவிட்டார். இதுகுறித்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி நீலாங்கரை போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடி குண்டு நிபுணர்களுடன் நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு சென்று ஒரு மணி நேரம் சோதனை செய்தனர். ஆனால் எந்த வெடி குண்டும் சிக்க வில்லை. இதனால் இது வெறும் புரளி என தெரியவந்தது. பின்னர் போலீசார் மிரட்டல் விடுத்த மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அதில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த புவனேஸ்வரன்(27) என்றும், மனநலம் பாதிக்கப்பட்ட இவர் தனது சிறிய தந்தையின் செல்போனை எடுத்து மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.புவனேஸ்வரன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் அஜித் வீடுகளுக்கு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து மரக்காணம் சென்ற போலீசார் மிரட்டல் விடுத்த புவனேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் நடிகர் விஜய் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது….