புழல், அக். 27: மாதவரம் மண்டலம் 31வது வார்டில் ₹18 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்ட பூமி பூஜை போடப்பட்டது. மாதவரம் மண்டலம் 31வது வார்டு புழல் அடுத்த கதிர்வேடு ரெட்டைமலை சீனிவாசன் தெருவில் ரேஷன் கடை கட்டிடம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் நாளடைவில் பாழடைந்து பயன்பாடு இல்லாமல் இருந்தது. எனவே, அப்பகுதி மக்கள் மாநகராட்சி கவுன்சிலர் சங்கீதா பாபுவிடம் புதிய ரேஷன் கடை கட்டிதர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து ₹ 18 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், பழைய ரேஷன் கடை கட்டிடட்தை இடித்தனர்.
இதனை தொடர்ந்து, ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, கவுன்சிலர் சங்கீதா பாபு தலைமை தாங்கினார். மாதவரம் மண்டல ஆணையர் சின்னதுரை, உதவி பொறியாளர் ஜெயலட்சுமி, செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் முகமது ஆசிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பூஜைகளுடன் கட்டிடப் பணிகளுக்கான செங்கலை வைத்து கட்டிடப் பணி துவக்கி வைக்கப்பட்டது.
செங்குன்றம் கூட்டுறவு விற்பனை சங்க வேளாண்மை இயக்குனர் வெங்கட் ரமணன், மேலாளர் தணிகாச்சலம், சமூக ஆர்வலர் கதிர் பாபு, காங்கிரஸ் சர்க்கிள் தலைவர் சந்திரசேகர், திமுக நிர்வாகிகள் பொன் சதீஷ்குமார், கதிர் குமார், சரவணன், விஜய்சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ரேஷன் கடை கட்டிட பணி விரைவில் கட்டி முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்படும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.