சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஆளுநர் ரவி சட்டத்தின் ஆட்சி முறைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். நீட் விலக்கு மசோதாவை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இதன் விளைவாக வளரும் இளைய தலைமுறையினர் தற்கொலை சாவுக்கு நெட்டித் தள்ளப்படுகிறார்கள். இதே போல் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்கும் சட்டம் நிறைவேற்ற ஒப்புதல் வழங்க மறுத்து வருவதால். சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் உட்பட பல குடும்பங்கள் திவாலாகி, உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்ற துயரத்தை கண்டு கொள்ளாத “இதயமும் இரக்கமும்” இல்லாதவராக ஆளுநர் அமைந்திருப்பது வரலாற்று அவலமாகும். சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் அரசின் முடிவை ஏற்க மறுத்து வருகிறார்.தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை விமர்சித்து அடிப்படையற்ற அவதூறுகள் பரப்பி வருகிறார். மலிவான அரசியலில் ஈடுபட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் சட்டவிரோத, அநாகரிக செயலை இந்திய கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.