Sunday, October 6, 2024
Home » தண்ணீர் கேட்பது போல் நாடகமாடி 10 பவுன் நகை திருடிய 5 பெண்கள் கைது உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு

தண்ணீர் கேட்பது போல் நாடகமாடி 10 பவுன் நகை திருடிய 5 பெண்கள் கைது உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு

by Karthik Yash

உளுந்தூர்பேட்டை, அக். 21: உளுந்தூர்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்து 10 பவுன் நகையை திருடி சென்ற 5 பேர் கொண்ட பெண் கும்பலை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பாண்டூர் ரோடு தனியார் மண்டபம் பின்பகுதியில் வசித்து வருபவர் தனியார் வங்கி ஊழியர் ஸ்டீபன்ராஜ். இவர் நேற்று காலை வங்கிக்கு சென்றுவிட்டதால் வீட்டில் இவரது மனைவி ஜெனிபர்(27) தனியாக இருந்துள்ளார். நேற்று மதியம் இவரது வீட்டிற்கு வந்த 5 பேர் கொண்ட பெண் கும்பல் தண்ணீர் கொடுக்குமாறு கேட்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து இருப்பதை அறிந்த 5 பேர் கொண்ட பெண் கும்பலில் ஒரு பெண் நைசாக வீட்டின் பின்பக்க கதவு வழியாக வீட்டிற்குள் புகுந்து ஒரு அறையில் இருந்த பீரோவை அதில் இருந்த சாவியை கொண்டு திறந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 10 பவுன் நகையை திருடி சென்றார். ஜெனிபரிடம் பேசிக்கொண்டு இருந்த 4 பெண்களும் திடீரென கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டதால் சந்தேகம் அடைந்த ஜெனிபர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகை திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடன் அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் கூறி சத்தம்போட்ட போது அங்கிருந்துவர்கள் ஓடிச் சென்று அருகில் உள்ள தெருவில் நடந்து சென்ற 5 பெண்களையும் மடக்கி பிடித்து உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட பெண்களிடம் இன்ஸ்பெக்டர் குணபாலன், சப்இன்ஸ்பெக்டர் பிரித்தா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அனைவரும் ஈரோடு நகரப்பகுதியை சேர்ந்த அய்யப்பன் மனைவி முத்தம்மாள்(38), கோபால் மனைவி மீனாட்சி(30), ஜீவா மனைவி கவிதா(28), சுப்புடு மனைவி மங்கம்மாள்(35), கண்ணன் மனைவி முனியம்மாள்(35) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்து அனைவரையும் சிறையில் அடைத்தனர். வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்து 10 பவுன் நகையை திருடிய 5 பேர் கொண்ட பெண் கும்பல் பிடிபட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

four × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi