புதுடெல்லி: திரிபுரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்துள்ளார். திரிபுரா கவர்னராக இந்திரசேனா ரெட்டியும், ஒடிசா மாநிலத்துக்கு ரகுபர் தாசும் நியமிக்கப்பட்டுள்ளனர். திரிபுரா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள இந்திர சேனா ரெட்டி தெலங்கானாவை சேர்ந்தவர். அம்மாநிலத்தில் உள்ள பாஜ மூத்த தலைவர்களில் ஒருவர். தெலங்கானா மாநில பாஜ செயலாளராக பதவி வகித்து வந்த அவர் சமீபத்தில் பாஜ மேலிட தலைவர்கள் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார். மூத்த தலைவர்களுக்கு பாஜ மேலிடம் உரிய அந்தஸ்து வழங்குவதில்லை என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஒடிசா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ரகுபர் தாஸ் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர். 68 வயதாகும் அவர் பாஜவின் தேசிய துணை தலைவர்களில் ஒருவராக பதவி வகித்து வந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2014 முதல் 2019ம் ஆண்டு வரை முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது அவரை தேசிய அரசியலில் இருந்து கவர்னர் பதவிக்கு பாஜ மாற்றியுள்ளது. புதிய கவர்னர்கள் இருவரும் விரைவில் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.