சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த 6ம் தேதி இரவு முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக வீடுகள், சாலைகள், தெருக்களில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் பகலிலேயே குளிரும் சூழல் நிலவியது. இரவு நேரங்களில் கடும் குளிர் காணப்பட்டது. இதை பார்க்கும்போது சென்னையில் இருக்கிறாமோ, ஊட்டி, கொடைக்கானலில் இருக்கிறோமோ என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்தது. தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்ததால் வெயிலை பார்க்க முடியாத நிலை காணப்பட்டது. ஒரு பக்கம் சாலையில் தண்ணீர், மறுபுறம் இதமான குளிர் காற்றுடன் ரம்மியமான சூழல் கடந்த 5 நாட்களாக சென்னை மாநகரமே இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது. அதன்பிறகு மழை பெய்யாத நிலையில், நேற்று முன்தினம் குளிராக இருந்ததால் மக்கள் சிரமப்பட்டனர். இந்த நிலையில், 5 நாட்கள் கழித்து நேற்று காலை வெயில் மெல்ல, மெல்ல எட்டி பார்க்க தொடங்கியது. அப்போது, மேகக்கூட்டங்கள் அடிக்கடி வெயிலை மறைத்து விட்டு சென்ற போதிலும், நீண்ட நாட்களுக்கு பிறகு வெயிலை காண முடிந்தது சென்னை மாநகர மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதை பார்த்து இப்போதுதான் அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது போன்ற எண்ணத்தை, வெயில் அவர்களுக்கு விதைத்துள்ளது. வெயில் வாட்டி வதைக்கும் ேகாடை காலங்களில் மழையை கேட்கும் சென்னை மக்கள், தற்போது பெய்த மழையை பார்த்து எப்போது வெயில் அடிக்கும் என்று கேட்க வைத்து விட்டது. இனி மழையை சென்னை மக்கள் கேட்பார்களா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கும் கடந்த 5 நாட்களாக மழை வெளுத்து வாங்கி விட்டது. …