சென்னை: சென்னை சைபர் க்ரைம் பிரிவில் கடந்த 27.8.2023 அன்று ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த நபர் ஒருவர் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், தமிழ்நாடு முதல்வர் மற்றும் எம்பி கனிமொழி ஆகியோர் குறித்து அவதூறாக @ananthamharshi என்ற டிவிட்டர் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த புகாரின் படி சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆனால் டிவிட்டரில் தவறாக பதிவு செய்த நபர் யார் என்று கண்டு பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் சைபர் க்ரைம் போலீசார் @ananthamharshi டிவிட்டர் கணக்கில் உள்ள நபரின் ஐபி விவரங்கள் குறித்து டிவிட்டர் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பட்டது. அதன்படி டிவிட்டர் நிறுவனம் அளித்த தகவலின் படி, முதல்வர் மற்றும் கனிமொழி குறித்து அவதூறாக பதிவு செய்த வழக்கில் கடந்த 52 நாட்களாக தலைமறைவாக இருந்த வேலு முருகானந்தம்(54) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த தவறாக பதிவு செய்ய பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.