சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப் பேரவையின் தலைவர் அப்பாவு நடுநிலையோடு செயல்படாமல், நாட்டாமை செய்து கொண்டிருப்பது மக்களை வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கழகத்தில் இருந்து பொதுக்குழுவால் நீக்கப்பட்ட புல்லுருவிகளுக்கு கொம்பு சீவிவிடும் வேலையிலும் சபாநாயகர் அப்பாவு ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். கழகத்திலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை பேசவிட்டு ரசித்து மகிழ்கிறார். சட்டப் பேரவையில் சபாநாயகர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். அவர் நடுநிலையோடு நடக்க வேண்டும் என்பதை மறந்து, அனைத்து மரபுகளையும் காற்றில் பறக்கவிட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் பேசும் போதும், அரசின் திட்டங்களையும், அதன் குறைகளையும் எடுத்துரைக்கும் போது, சம்பந்தப்பட்ட மந்திரிகள் பதில் அளிப்பதற்கு தயாராக இருக்கும் போது கூட, தான் நடுநிலையான சபாநாயகர் பதவி வகிக்கிறோம் என்பதை மறந்து, தானே சம்பந்தப்பட்ட துறை மந்திரி போல் பதிலளிக்கிறார்.