தண்டராம்பட்டு, அக்.12: தண்டராம்பட்டு அருகே பாம்பாற்றை கடந்து செல்ல முயன்றபோது, மாணவர்களுடன் தனியார் பள்ளி பஸ் வெள்ளத்தில் சிக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ் நேற்று காலை சுற்றுபுற பகுதிகளுக்கு சென்று 20க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சை வலசை கிராமத்தை சேர்ந்த ஏழுமலை(35) என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் மேல்வலசை, கீழ்வலசை, செம்மம்பட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பீமாரபட்டி கிராமத்திலிருந்து பாம்பாற்றை கடந்து செல்ல முயன்றபோது பள்ளி பஸ் திடீரென வெள்ளத்தில் சிக்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகிலிருந்த பொதுமக்கள், உடனடியாக பஸ்சில் இருந்த 20 மாணவர்களையும் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் வெள்ளத்தில் சிக்கியிருந்த பஸ் மீட்கப்பட்டது. இச்சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில். ‘மழைக்காலத்தில் வெள்ளம் வரும்போது இந்த பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதை கடந்து செல்ல முடியாமல் அனைவருக்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே பாம்பாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற எங்களது பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.