Tuesday, October 1, 2024
Home » திருச்சி முக்கொம்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

திருச்சி முக்கொம்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

by Kalaivani Saravanan

சென்னை: முக்கொம்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முக்கொம்பில் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் பதில் அளித்தார். முக்கொம்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் பழனிசாமி வலியுறுத்தினார்.

இதுகுறித்து பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த அக்டோபர் 4ம் தேதி மாலை 4 மணியளவில், திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய சரகம், முக்கொம்பு சுற்றுலாத் தலத்திற்கு ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார், நவல்பட்டு காவல் நிலைய காவலர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து பணியில் பணிபுரிந்து வரும் சங்கர் ராஜபாண்டியன் ஆகியோர் அனுமதியோ, விடுப்போ பெறாமலும், உயரதிகாரிகளுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமலும், ஜீயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து, பல நாட்களாகப் பணிக்கு வராமல் இருந்த காவலர் சித்தார்த்தன் என்பவருடன் இணைந்து சென்று, சுற்றுலாத் தலத்திற்கு வருகை தந்திருந்த இளைஞர் மற்றும் 17 வயது பெண்ணை மிரட்டி, அந்த இளைஞரைத் தாக்கி விரட்டி அனுப்பிவிட்டு, உடனிருந்த பெண்ணை அந்தக் காவலர்கள் தாங்கள் வந்திருந்த தனியார் காரில் ஏற்றி, அவரிடம் தவறான முறையில் நடந்திருக்கிறார்கள்.

பின்னர், அந்தப் பெண் சத்தம் போட்டதால், அவரைக் காரிலிருந்து இறக்கிவிட்டிருக்கிறார்கள். இதனையடுத்து அந்தப் பெண் மற்றும் அவருடன் வந்த இளைஞர் இருவரும் முக்கொம்பு புறக்காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்ததின் பேரில், அங்கு பணியிலிருந்த காவல் துறையினர் உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று, அந்தக் காவலர்களை விசாரித்தபோது, அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. இங்கே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறபோது, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொன்னார். அது உண்மையல்ல. அந்தக் காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன், அந்தக் காவல் நிலைய உதவி ஆய்வாளர், உடனடியாக எஸ்.பி. அவர்களைத் தொடர்பு கொண்டு, அவருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று, நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை என்று குறிப்பிட்டார்.

உடனடியாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அளவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் அன்றே கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், குற்றம் இழைத்த காவலர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கக்கூடிய பிரிவுகளின் கீழ், துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இதில் விசாரணை முடிக்கப்பட்டு, இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில், குறிப்பாக பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதை இந்த அவைக்குத் தெரிவித்து கொள்கிறேன் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

You may also like

Leave a Comment

17 − seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi