தூத்துக்குடி : தூத்துக்குடியில் வாரத்தில் 6 நாட்களும் மீன்பிடி தொழிலுக்கு செல்ல வேண்டுமென வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 260 விசைப்படகுகள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 260 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன. அனைத்து விசைப்படகுகளும் ஒரே நாளில் கடலுக்கு சென்றால் மீன் பாடு குறைவாக இருப்பதால் சுழற்சி முறையில் விசைப்படகுகளை கடலுக்கு அனுப்ப விசைப்படகு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதன்படி வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே ஒரு படகு மீன்பிடிக்க செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில் விசைப்படகு தொழிலாளர்கள் வாரத்தில் 6 நாட்களும் மீன்பிடி தொழிலுக்கு செல்ல வேண்டும் என உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் விசைப்படகு உரிமையாளர்கள், வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே மீன்பிடித் தொழிலுக்கு செல்ல முடியும். அனைத்து நாட்களிலும் சென்றால் போதுமான வருமானம் கிடைப்பதில்லை என்று மறுத்து விட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசைப்படகு மீன்பிடி தொழிலாளர்கள் நேற்று மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விசைப்படகுகள் அனைத்து மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.